கொரோனா விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அ.ச. உமர் பாரூக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத் மாநாட்டை சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மாநாட்டிற்கு பின்பும் பல கூட்டங்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தை ஒரு மத ரீதியாக மாற்றப்பட்டு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இரு சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதப் பிரிவினையை ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் கூறியிருந்தார். மேலும், இதுதொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.