தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பரிசோதனை செய்ய பயன்படும் ரேபிட் கிட் சோதனைகான கொள்முதல் பெரிய சர்ச்சையில் முடிந்துள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அனைத்தையும் திருப்பி அளிக்கும்படி அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ICMR கடிதம் எழுதியுள்ளது. RT-PCR கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசு பெற்றுள்ள 24,000 ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
அனைத்து கொள்முதல் ஆர்டர்களும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை. ரேபிட் கிட்டிற்கு இதுவரை பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் இதனை மலிவான அரசியலாக்க முயற்சி செய்கின்றன. கருவிகள் திருப்பு அனுப்பப்படுவதால் தமிழக அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படாது. ரேபிட் கிட்களை, ஆந்திர அரசு 730 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. அதேபோல் கேரள அரசு 699 ரூபாய்க்கு வாங்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு 600 ரூபாய்க்குத்தான் வாங்கியது.
மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிக குறைவான விலையில்தான் தமிழகம் வாங்கியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்த அதே நிறுவனம் மற்றும் டீலரிடம்தான் ரேபிட் கிட் வாங்கப்பட்டுள்ளது. wond fo என்ற நிறுவனத்திடம் இருந்து shan bio tech என்ற டீலர் மூலம்தான் கிட்கள் வாங்கப்பட்டது. இரண்டும் மத்திய அரசு அளித்த நிறுவனங்கள் ஆகும். மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது.
மத்திய அரசு சொல்லாத எந்த நிறுவனத்திடமும் நாங்கள் கிட்களை வாங்கவில்லை. இந்த உண்மை திமுகவிற்கு தெரியவில்லை. மத்திய அரசு அனுமதிக்காத நிறுவனத்திடம் நாங்கள் வாங்கியதாக திமுக பொய்; பிரச்சாரம் செய்கிறது. உண்மையை அறியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவசர கோலத்தில் அறிக்கைகளை அள்ளி தெளிக்கிறார். இது திமுக தலைவர் ஸ்டாலினின் பொய்யான பிரச்சாரத்தின் வெளிப்பாடு ஆகும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.