தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த மழவேனிற்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரா. மூதாட்டியான இவர், செல்போன் மூலம் ஆட்டோ வேண்டும் என அதிரை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனரும் மழவேனிற்காடு சென்று அந்த மூதாட்டியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் வந்துள்ளார்.
வரும் வழியில் ஆட்டோவில் இருந்த மூதாட்டி சந்திரா, ஆட்டோ ஓட்டுனரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த மூதாட்டியை அழைத்துக்கொண்டு தனது பேருந்து நிலைய ஆட்டோ சங்கத்தில் ஒப்படைத்து நடந்தவற்றை விரிவாக கூறியுள்ளார்.
உடனே பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், மூதாட்டி வைத்திருந்த கைப்பையை வாங்கி பார்த்தபோது சுமார் அறுபத்தி ஐந்தாயிரம் மதிப்பு ரொக்கம் இருந்தது. இதையடுத்து உடனே மூதாட்டி சந்திராவை, பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் இருந்து மழவேனிற்காடு ஊராட்சி மன்றத்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் உடனே அதிராம்பட்டினம் காவல் நிலையம் வந்தடைந்தார். பின்னர் ஊராட்சி மன்றத்தலைவரிடம் மூதாட்டி சந்திராவை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.