இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரு, தட்சிணா கன்னட, கலாபுராகி, பிதர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை கர்நாடகாவில் 9,68,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர், கர்நாடகாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாகவும் அடுத்த மூன்று மாதங்கள் மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அழர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வாரம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுதிதனார். மாஸ்க்குகளை அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.