புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போதைய சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை,
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பாடுவார் என்று அதிமுக மேலிடம கருதியதால் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்து ரத்தினசபாபதி கட்சி பொறுப்பில் இருந்து திடீர் என விலகியுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி, அதிமுகவை தற்போது நிர்வகித்து வரும் நிர்வாகிகள் சர்வாதிகாரிகளைப்போல செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட் பாளர்களை உள்ளூர் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக அறந்தாங்கி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நான் கேட்ட எந்த கேள்விக்கும் முறையாக அவர் பதில் சொல்லவில்லை என்றும் ரத்தினசபாபதி கூறினார்.
அறந்தாங்கி உட்பட குளறுபடியான தொகுதிகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்றிவிட்டு, மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், விராலிமலை முருகன் கோயிலில் தொடங்கி, கோடியக்கரை வரை பொது மக்களிடம் நீதி கேட்டு வாகனப் பிரச்சாரம் செய்யவேன் என்று ரத்னசாபாதி கூறியிருந்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 தொகுதிகளிலும் இந்த தேர்தலில் அதிமுக தோல்வி யுற்றால், அதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கரே முழுக் காரணம் என்று ரத்தினசபாபதி கொந்தளித்து இருந்தார்.
ஆனால் ரத்தினசபாபதியின் கோரிக்கையை அதிமுக மேலிடம் கடைசி வரை ஏற்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்த ரத்தினசபாபதி, தீவிரமான யோசனையில் இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பதவியில் இருந்து வந்த அவர் தனது பதவியினை ராஜிநாமா செய்துள்ளார். அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.