நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள நிலையில் கொரோனா 2ம் அலையை வரவிடாமல் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச் 25) புதிதாக 2523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கும் மேலான பாதிப்பை பெங்களூரு சந்தித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1623 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பெங்களூருவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இப்புதிய நடைமுறை குறித்து பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகளுடன் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரன் கலந்துரையாடினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, “பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 60% மேற்பட்டவர்கள் வெளிமாநில பயணம் மேற்கொண்டவர்கள். எனவே தான் பெங்களூருவுக்கு செல்லும் அனைவருக்கும் இப்புதிய விதிமுறையை அமல்படுத்துகிறோம்.
பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் வைக்கப்படுபவர்களுக்கு கையில் முத்திரை குத்தப்படும்.
20 முதல் 40 வயதுடையோருக்கு பாசிட்டிவிட்டி வருவது அதிகரித்துள்ளது. எனவே இவர்கள் பயணம் செய்வதையும், பிறருடன் கலப்பதையும் தடுப்பது அவசியமாகிறது. இதே போல கொரோனா விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிபவர்களுக்கு 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். என அமைச்சர் சுதாகரன் குறிப்பிட்டார்,
பெங்களூருவில் இன்றைய தேதி வரை 9,78,478 பேருக்கு மொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 9,47,781 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 12,471 பேர் உயிரிழந்துள்ளனர். 18,207 பேர் நோய்த்தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர்.