தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2,200ஐ தாண்டியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரையும் பதம் பார்த்துவருகிறது கொரோனா.
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களான சந்தோஷ் பாபு, பொன்ராஜ், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்லேறு அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பின்பற்றியது போல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களை தவிர்ப்பதுடன், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியையும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.