சென்னை துறைமுகம் தொகுதியில் வடமாநில இளைஞர்களை அழைத்து வந்து பாஜக சார்பில் கள்ள ஓட்டு போட முயற்சி நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் பிராட்வே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று பிற்பகலில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டமாக வந்துள்ளனர்.
அவர்களைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த ஏரியா மக்கள் யார் நீங்கள், உங்களை இதற்கு முன்பு ஏரியாவில் பார்த்தது கிடையாதே, எதற்காக இங்கே வந்தீர்கள், உங்கள் அடையாள அட்டையை எடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர்கள் நழுவி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏரியா மக்கள் சிலர் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த இளைஞர்கள் சவுகார் பேட்டை பகுதியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏரியாவுக்கு புதிதாக இருக்கிறது என்பதால் நாங்கள் அடையாள அட்டையை கேட்டோம். நாங்கள் கேள்விகளை கேட்கத் தொடங்கியதும், அவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். இவர்களை கள்ள ஓட்டு போடுவதற்கு பாஜக அழைத்து வந்திருக்க கூடும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இங்கு வேலை பார்ப்பதற்குதான் வடமாநில இளைஞர்களுக்கு அனுமதி கொடுத்தோம். அவர்களுக்கு எப்படி வாக்காளர் அடையாள அட்டை கிடைத்திருக்கும்? வாக்காளர் அடையாள அட்டை கொடுத்து இருந்தாலும் தவறு. ஒருவேளை அடையாள அட்டை இல்லாமல் வந்திருந்தாலும் அதுவும் பெரும் தவறுதான். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் இன்னொரு நபர்.
Source : One India Tamil