Home » காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் ஷாநவாஸ் ஷேக்!

காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் ஷாநவாஸ் ஷேக்!

0 comment

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், கொரோனா இறப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஷாநாவாஸ் ஷேக் என்பவர் ஏழை மக்களுக்கு உதவி வருகிறார்.

ஷாநவாஸ் ஷேக், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்காகவே கட்டுப்பாட்டு அறையுடன் ஒரு குழுவை அமைத்து, தொலைபேசி மூலம் உதவி கேட்கும் நோயாளிகளுக்கு தனது சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி விநியோகித்து வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் இவ்வாறு ஆக்சிஜன் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விற்று அந்தப் பணத்தில் 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

தனது நண்பர் ஒருவரின் மனைவி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆட்டோவிலேயே மரணமடைந்தது தன்னை புரட்டிப்போட்டு விட்டது என்றும், அதற்காகவே மக்களின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் அளிக்கும் திட்டத்தைத் துவங்கியதாகவும் தெரிவித்துள்ளார் ஷாநவாஸ்.

இதுவரை அவர் சுமார் 4 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரிடர் காலத்தில், அரசே தடுமாறி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு உதவும் ஷாநவாஸ் ஷேக்கிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter