கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முஸ்லீம்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசின் ஆணையை ஏற்று வரும் 30/04/2021 வரை அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதி உள்ளதால், ஐவேலைத் தொழுகையையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களை கொண்டு நிறைவேற்றி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்றும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.