தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இடப்பாற்றாக்குறை காரணமாக கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை சிறைக்குப் பதிலாகச் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் என பல்வேறு தலைவர்கள் குறித்துத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருபவர் யூ டியூபர் கிஷோர் கே சாமி.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் கிஷோர் கே சாமியைக் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், திமுகவின் ஐடி பிரிவின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் போலீசில் கடந்த 10ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் கே சாமியை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி அவர் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சைதாப்பேட்டை சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக அவர் தற்போது செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 28ஆம் தேதி வரை அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். மேலும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
முன்னதாக நேற்றிரவு கிஷோர் கே சாமியை மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கனவே குட்டு வைத்தும் கிஷோர் கே சாமி திருந்தவில்லை என்றும் பெண்கள் குறித்து அவரது பதிவுகள் கேவலமான எண்ணம் கொண்டவை என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் பெண்களைப் பற்றி குரூரமான, கேவலமான பதிவுகளை கிஷோர் கே சாமி பதிவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதி, பெண்கள் குறித்த கிஷோர் கே சாமியின் பதிவுகள் அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது என்றார்.
ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு உள்ளது. இது தொடர்பான வழக்கில் அவரை கடந்த ஆண்டே காவல்துறை கைது செய்தனர். இருப்பினும் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.