ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதும் பட்டய கணக்காளர் (CA) தேர்வில் 15ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். அதில் தற்போது அதிரை தன்வீரும் சேர்ந்து இருக்கிறார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த ஒரு செயலுக்கும் நிய்யத் என்பது இன்றியமையாதது. இதனையே பிற மதத்தினர், நோக்கம் அல்லது குறிக்கோள் என கூறுகின்றனர். அவ்வாறான ஓர் குறிக்கோள், இக்பாலின் மூத்த மகனான தன்வீருக்கு பத்தாவது படிக்கும்போது வந்தது. அதற்கு முதன்முதல் காரணமாக இருந்தவர் கணக்கு ஆசிரியர் ஷேக்.
எதிர்காலத்தில் டாக்டர், பொறியாளர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு வர வேண்டும் என மாணவர்களை பலர் வழிநடத்துவர். ஆனால் சி.ஏ. என்ற உயர்தர பொறுப்பு ஒன்று உள்ளது என மாணவர்களுக்கு அக்கறையுடன் தகவல் சொன்னார் ஷேக்.
அதுதான் தன்வீரின் மனதில் தீ பொறியை பற்றவைத்தது. 10ம் வகுப்பு பாஸான கையோடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் பதிவு செய்து தனது லட்சிய பயணத்தை துவங்கியபோது தன்வீருக்கு வயது 16! அப்போது அவனிடம் இருந்தது நம்பிக்கையும் விடாமுயற்சியும் மட்டுமே. 9 ஆண்டுகள் தன்வீர் தன்னை தயார் படுத்திய விதம் ஓர் சிற்பியின் வேலைப்பாடுகளைவிட மேலானது.
ஏனெனில் அதிகாலை இறை வணக்கத்தை முடித்து புத்தகத்தை கையில் எடுக்கும் அவர், பல சமயங்களில் இரவு 8 மணியை கடந்தும் படித்ததுண்டு.
அதற்காக படிப்பில் மட்டுமே மூழ்கியவர் என யாரும் தன்வீரை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். கால்பந்து விளையாட்டு என்றால் அவருக்கு கொள்ளைப்பிரியம். தன்னை ரீசார்ஜ் செய்ய வேண்டுமெனில் மைதானத்திற்கு சென்று நண்பர்களுடன் கால்பந்து விளையாட ஆரம்பித்துவிடுவார்.
பட்டய கணக்காளர் தன்வீர், அடுத்து என்ன செய்ய போறீங்க?
எனக்கான துறையில் ஒரு பக்கா ஸ்டெக்சர் உள்ள கம்பெனியில் வேலை செய்யனும். அப்புறம் அந்த அனுபவத்தை வச்சு சொந்தமா ஒரு கம்பெனி ஓப்பன் பண்ணனும் என உற்சாகமாக பேச ஆரம்பித்த தன்வீரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.
சி.ஏ.வின் பணிகள் என்ன??
நிறுவனம், தனிநபர் உள்ளிட்டவைகளின் வரவு-செலவு விபரங்களை தணிக்கை (ஆய்வு) செய்து ஒப்புதல் அளிப்பதாகும். இதன் மூலம் அரசுக்கான வரி இறுதி செய்யப்பட்டு செலுத்தப்படும்.
சி.ஏ. படிப்பு என்ன அவ்வளவு கஷ்டமா?
கஷ்டம், நஷ்டம் எல்லாம் இங்கு இல்லை. நாம் எது செய்தாலும் விருப்பப்பட்டு செய்யணும். எனக்கு என ஓர் லட்சியம் இருந்தது. அதனை நோக்கி பயணம் செய்தேன். சில தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தேன். இறைவன் அருளால் தற்போது வெற்றிபெற்றுள்ளேன்.
சி.ஏ. பணியில் வட்டிக்கு கணக்கு எழுத வேண்டியது வரும் என கூறுகிறார்களே?
நமது சமூகம் பேணுதலுடன் இருப்பது சரி தான். இருந்தாலும் சி.ஏ என்பது ஓர் விருட்சமான ஆலமரம் போன்றது. அதில் பல பிரிவுகள் உள்ளன. ஆதலால் வட்டியை கண்டு நாம் அஞ்ச வேண்டாம். எதிர்காலத்தில் நமது தேசத்தில் இஸ்லாமிய நடைமுறையிலான வங்கி உருவாக வேண்டும் என்றால், அதற்கான துறை சார்ந்த சி.ஏ.க்கள் வேண்டும் தானே!
தன்வீரின் வெற்றி தணிக்கை தொடரட்டும்…
-ஜெ.முகம்மது சாலிஹ்