அதிரை மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? -ஜெ.முகம்மது சாலிஹ், ஊடகவியலாளர்
அதிரையை தலைமையிடமாக கொண்டு தாலுக்கா அலுவலகம் உருவாகுமா?
தமிழகத்திலேயே 175 வருவாய் கிராமங்களை கொண்ட மிகப்பெரிய தாலுக்காவாக பட்டுக்கோட்டை தாலுக்கா உள்ளது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், துவாரங்குறிச்சி, பெரியக்கோட்டை ஆண்டிகாடு குறிச்சி நம்பிவயல் தம்பிக்கோட்டை திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட 10 சரகங்களை கொண்ட மிகப்பெரிய தாலுக்காவான பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து அதிரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுக்காவை உருவாக்க வேண்டும் என நீண்டகாலமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு? இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை தொகுதியை திமுக கைப்பற்றியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்களின் பங்கு மிக அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலிலும் திமுகவுக்கு அதிகப்படியான வாக்குகளை அதிரை மக்கள் அளித்து தனிப்பெரும்பான்மையை நகர மன்றத்தில் அளித்துள்ளனர். இத்தகைய சூழலில் அதிரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்கள் பட்டுக்கோட்டையிலிருந்து பிரித்தும் மற்றும் சில பகுதிகளை இணைத்தும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்காவை உருவாக்குமா தமிழக அரசு?
அதிரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள முஸ்லிம்களால் அதிகமாக வாக்கு அளிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன திமுகவைச் சேர்ந்த திரு அண்ணாதுரை முயற்சி எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பத்து சரகங்களை கொண்ட மிகப்பெரிய தாலுகாவாக உள்ளதால் பேரிடர் காலங்களில் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நிர்வகிப்பது சிரமம். பேரிடர் காலங்களில் அதிகமான பாதிப்பு ஏற்படுவது அதிராம்பட்டினம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் தான். அச்சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் மக்களை சென்றடைய சிரமமாக இருக்கிறது. இதனை கடந்த பேரிடர் காலங்களில் இருந்து அறிய முடியும்.
எனவே அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்கப்படும் பட்சத்தில் அதிரை, மல்லிப்பட்டினம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட கடைக்கோடியில் உள்ள கடற்கரைப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அரசு சார்ந்த பணிகளுக்கு பட்டுக்கோட்டைக்கு அலைய தேவையில்லை. மேலும் இதனால் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளும் வளர்ச்சி அடையும்.
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாள் கனவு நனவாகுமா?
பொறுத்திருந்து பார்க்கலாம்!!