அதிராம்பட்டினம் மார்ச் 05, நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலின் கடைசி கட்டமாக நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
எப்போதும் இல்லாத வகையில் தலைவர் தேர்தலில் கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிடக்கூடாது என்பதற்காக தேர்தல் நாள் வரை ஊர் ஊராக அழைத்துச் சென்று நன்றாக கவனிக்கப்பட்டனர். இது வாக்காளர்களிடையே முகம் சுளிக்க வைத்தது.
இந்நிலையில், துணைத் தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று காலைவரை நகர கம்யூனிஸ்ட் கட்சி தலைவரை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், திடீர் திருப்பமாக, மாநில திமுக தலைமையின் கட்டளைக்கு எதிராக துணைத்தலைவர் தேர்தலில் திமுக நகரத்தலைவர் மனுத்தாக்கல் செய்தார்.
அதனால் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரச்சினை செய்வார்கள் என்பதால், திமுகவினர் மூன்று நான்கு கிராமங்களைச் சேர்ந்தவர்களை நகராட்சி அலுவலகம் முன் அழைத்து வந்திருந்தனர். தேர்தல் முடிந்து நகரச்செயலாளர் வெளியே வந்த உடன் கிராமங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு நகரச்செயலாளரின் குடும்பத்தினர் மூலம் தலா ரூ500 கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
21 நகராட்சி உறுப்பினர்களை பெற்றிருந்த போதிலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதாலும், கவுன்சிலர்களை கூவத்தூர் பாணியில் அடைத்து வைத்ததாலும் ஒரே வாரத்தில் ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், கிராமங்களிலிருந்து ஆதரவாளர்களை வரச்செய்து கூட்டணிக் கட்சியினர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிரையில் புதிய அநாகரிக அரசியல் அத்தியாயம் எழுதப்படுவதை அரசியல் பார்வையாளர்கள், திமுக ஆதரவாளர்கள் கவலையுடன் பார்க்கின்றனர்.