அதிரை மேலத்தெருவின் விரிவாக்க பகுதியான தொக்காலிகாடு ஊராட்சியில் சமீபகாலமாக பூர்விக அதிரையர்கள் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு வசிக்க கூடிய மக்களின் வாக்குகள் அதிரை நகராட்சியின் 9, 10, 20 ஆகிய வார்டுகளிலேயே உள்ளன. இதன் காரணமாகவே கடந்த நகராட்சி தேர்தலில் கூட தொக்காலிகாடு ஊராட்சி பகுதியிலும் உதய சூரியன் ஸ்டிக்கர்களை ஒட்டியும் ஒவ்வொரு வீட்டிற்கும் நடையாய் நடந்தும் திமுக வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு சென்று வெற்றிபெற்றனர். கவுன்சிலர் பதவி கிடைத்து ஒருமாதம் கூட முழுமையாகாத சூழலில், அதிரை திமுக கவுன்சிலர்கள் ஊரின் எல்லை பிரிவினை குறித்து பேசி தங்களது பொறுப்புகளை தட்டிகளிக்க துவங்கிவிட்டனர். அதன்படி 9வது வார்டு திமுக கவுன்சிலர் ஹலீம் முகநூலில் வெளியிட்டிருக்கும் கருத்தொன்றில் “தவறாக உள்ள கருத்து அது தொக்காளிகாடு ஊராட்சிக்குஉள்பட்டது உடன் நிற்பது யார் என்று கவனித்து பார்க்கவும்” என கூறி தொக்காலிகாடு ஊராட்சியில் வசிக்கும் அதிரை வாக்காளர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டார்.
இதேபோல் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளரும் 17வது வார்டு உறுப்பினருமான முகைதீனும் உண்மையை மறைத்து மிக கடுமையான கருத்தை தெரிவித்துள்ளார். இதனை MMS.பகுருதீனும் லைக் செய்து முகைதீனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அதிரை எக்ஸ்பிரசிடம் பேசிய தொக்காலிகாட்டில் வசிக்கும் அதிரை வாக்காளர்கள், அதிரை நகராட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் திமுக’காரர்களுக்கு தொக்காலிகாடு ஊராட்சி அதிரையாக தெரிந்தது. ஆனால் வெற்றிபெற்று பதவி கிடைத்ததும் நாங்கள் தொக்காலிகாடு கிராமவாசிகளாக தெரிகிறோமா? என ஆவேசமாக திமுக கவுன்சிலர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் தலைமைக்கு கட்டுப்படாமல் ஆரம்பமே அமர்க்களம் செய்த திமுக கவுன்சிலர்கள், தற்போது ஓட்டுகளை வாரி சுருட்டிய பிறகு ஊர் எல்லையை காரணம் காட்டி தங்கள் பொறுப்புகளை தட்டிக்களிப்பது நல்ல பழக்கம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.