அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் தில்நவாஸ் பேகத்தை திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் தோற்கடித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தும் கூட்டணி தர்மத்தை மீறி பெற்ற துணை தலைவர் நாற்காலியில் இருந்து ஒரு இன்ச் கூட இராம.குணசேகரன் நகரவில்லை. இந்நிலையில் இந்த அரசியல் குழப்பத்திற்கு திமுக தலைமை முற்றுப்புள்ளி வைக்காத சூழலில், அதிரை நகராட்சி குழு உறுப்பினர் தேர்தலுக்கான அறிவிப்பை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 31ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆணைவர் சசிகுமார் தலைமையில் வரிவிதிப்பு மேல்முறையீடு குழு, நியமனக்குழு, ஒப்பந்தகுழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜா மைதீன், மு.க.ஸ்டாலினின் முடிவுக்கு எதிராக அதிரை திமுக கவுன்சிலர்கள் செயல்படுவதை சுட்டிக்காட்டினார். இதனால் அரசியல் குழப்பம் தீரும் வரை நகராட்சி குழுக்களுக்கான தேர்தல்களை நடத்த கூடாது என அவர் மனு அளித்தார்.