ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசால் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரமலான் மாதம் தொடங்க உள்ளதால், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தமிழக அரசு பச்சரிசி வழங்க முடிவு செய்துள்ளது.
2022 ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி 6,000 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்றும், இதனால் அரசுக்கு 13 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.