அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் திருப் பணிகள் நிறைவுற்று செட்டிதோப்பு கிராம பஞ்சாயத்தார்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர். இந்நிலையில் யாகசாலை அமைத்து கடந்த புதன்கிழமை முதல் பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத இன்று காலை சரியாக 10:15 மணி அளவில் கோவில் கோபுரத்தில் கலசத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கமல விநாயகரை தரிசனம் செய்துசென்றனர்.