அதிரை நகராட்சிக்கு சொத்து, வியாபாரம் உள்ளிட்டவற்றிற்கான கப்பங்களை நாள் தவறாமல் மக்கள் கட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை கொண்டு திறன்மிக்க நிர்வாகத்தை வழங்க முடியாமல் நகராட்சி திணறி வருவதாக பேசப்படுகிறது. இவற்றிற்கு சான்றாக திடக்கழிவு மேலாண்மையில் அதிரை நகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.
வண்டிப்பேட்டை அருகே உள்ள குப்பை கிடங்கு நிரம்பிவிட்டது என்பதற்காக ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஈசிஆர் சாலை ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே குப்பைகளை கொட்டியது நகராட்சி.
அனைத்தையும் பொறுத்துக்கொண்ட மக்கள், ஒரு கட்டத்தில் குப்பைகளை ஏற்றிவந்த நகராட்சி வாகனங்களை சிறைப்பிடித்து எதிர்ப்பை காட்டினர். இதனை தொடர்ந்து அதிரை ரயில் நிலையம் மற்றும் உப்பளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தில் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதிவாசிகள் உடனடியாக குப்பை ஏற்றிவந்த வாகனத்தை சிறைப்பிடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இச்செய்தி காட்டு தீ போல் பரவிய நிலையில், இன்று காலை அப்பகுதியில் பெண்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் திரண்டு நகராட்சியின் செயலை கண்டித்தனர். ரயில் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே குப்பைகளை கொட்டுவது எந்த விதத்தில் சரி? நீர் தேங்கி நிற்க கூடிய இடத்தில் குப்பைகளை கொட்டி நீர், நிலம், காற்று ஆகியவற்றை மாசு படுத்தி மக்கள் நலனை கேலி கூத்தாக்க முயற்சிப்பது ஏன்?
எதிர்காலத்தில் அதிகளவில் குப்பைகள் தேங்கி தீ விபத்து போன்ற அசம்பாவீதங்கள் ஏற்பட்டால் குடியிருப்பு வாசிகள் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்படுவார்களே. அதுகுறித்து நகராட்சி ஏன் சிந்திக்க மறுக்கிறது? வெளியூர்களிலிருந்து அதிரைக்கு வரும் மக்களை துர்னாற்றத்துடனும் நச்சு புகை மண்டலத்துடனும் வரவேற்பதை பெருமையாக கருதுகிறதா அதிரை நகராட்சி? போன்ற சிந்திக்க தூண்டும் கேள்விகளை வரிசையாக எழுப்பினர்.
அப்போது பேசிய ஜமாத் தலைவர் VMA.அகமது ஹாஜா, அதிரை ரயில் நிலையம் அருகில் உள்ள இடத்தில் குப்பை கொட்டும் முடிவை நகராட்சி கைவிட வேண்டும் என்றார். இதுகுறித்து நகராட்சியில் மனு கொடுத்திருப்பதை சுட்டிக் காட்டிய அவர், தீர்வு கிடைக்காத பட்சத்தில் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கூறினார்.
இதற்கு சரியான தீர்வை கொடுக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளான நகராட்சி மன்றத்திற்கு உண்டு. அதனை ஒருபோதும் அவர்கள் தட்டிக்கழிக்க முடியாது.
கடந்த ஓராண்டாக அதிரை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் நகராட்சி நிர்வாகம் துக்குமுக்காடி போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.