தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த போகும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தெரிகிறது. அதிரையை சேர்ந்த ஒரு சிலர் இன்று 14.09.2022 புதன்கிழமை காலை 11 மணிக்கு மின் கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால், மின்சார வாரிய ஊழியர் இன்று மின் தடை காரணத்தினால் மின் கட்டணம் செலுத்த இயலாது என்று தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதாலும், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தினால் அதற்குரிய மின்கட்டண ரசீது கிடைப்பதில் அவ்வப்போது சிக்கல் ஏற்படுவதாலும் நேரில் மின்வாரிய அலுவலகத்திற்கே மின் கட்டணம் சென்றால் இது போன்ற பொறுப்பற்ற பதிலை மின் வாரிய ஊழியர்கள் தெரிவிப்பதாக கூறினர்.
மேலும், அதிரையில் மின் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின் தடை செய்யப்படும் நிலையில், இது போன்ற மின் தடை ஏற்படும் நாட்களில் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்களிடம் இப்பொழுது மின் கட்டணம் செலுத்த முடியாது என கூறும் மின்வாரிய ஊழியர்களை மின்வாரிய உயர் அதிகாரிகள் கண்டிக்க தவறுவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிராம்பட்டினம் நகராட்சியாக மாறினாலும், அதன் காட்சி மாறவில்லை என்று சொல்லும் அளவிற்கு அரசு அலுவலகங்களுக்கு போதுமான தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாததன் விளைவால் இது போன்ற அலைக்கழிப்புகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அதிரையர்களின் பெரும் கோரிக்கையாக உள்ளது.