மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனை பழுது நீக்க கொடுத்தவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.2.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கதம் (40) என்ற நபர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் செல்போன் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என செல்போன் சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்தேன். அப்போது, கடைகாரர் செல்போனை சிம் கார்டுடன் கொடுத்துச் செல்லும்படி கேட்டார். நானும் சிம் கார்டுடன் செல்போனை கொடுத்துச் சென்றேன். மறுநாள் செல்போனை திரும்பப் பெற சென்ற போது கடை மூடப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்தும் பல நாள்கள் செல்போன் கடை மூடப்பட்டிருக்க, அதன் பிறகே எனது வங்கிக்கணக்கை சோதித்தேன். அப்போதுதான் எனது செல்போன் எண்ணை வைத்து பணம் மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, உடனே காவல்துறையிடம் புகார் அளித்தேன். தற்போது பணம் மாற்றப்பட்ட மற்றொரு வங்கி கணக்கின் எண்ணை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
source : vikatan