ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.
அதைத் தொடர்ந்து நளினி உட்பட சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நளினி உட்பட மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய இன்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, “சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறது.