ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் விவரங்களை பகிரக்கூடாது என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு நலத்திட்டங்களுக்கும் தற்போது ஆதார் கட்டாயமாக கேட்கப்படுகிறது. 12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில் ஒருவவரது கை ரேகை பதிவு , பெயர், புகைப்படம் என அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளன.
இதன் காரணமாக, மோசடிகளை தவிர்த்து பயனாளிகளுக்கு உரிய முறையில் நலத்திட்டங்கள் சென்று சேர்வதை ஆதார் மூலமாக உறுதிப்படுத்த முடியும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், வங்கிக் கணக்கு எண் தொடங்குவதற்கு, செல்போன் சிம் கார்டு வாங்க என அரசு திட்டங்களை தவிர்த்து பிற சேவைகளுக்கும் ஆதார் எண்ணே முதன்மையானதாக கேட்கப்படுகிறது. ஆதார் எண்ணை யாருடனும் அவசியம் இன்றி பகிரக்கூடாது என்று ஆதார் ஆணையம் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும் பொது தளங்களிலும் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியிருப்பதாவது:- சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் எண்ணை பொதுமக்கள் பகிரங்கமாக பகிரக் கூடாது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களிடம் ஆதார் ஓடிபி எண்ணை பகிரக்கூடாது.
அதேபோல், ஆதார் எம். பின் (பாஸ்வேர்டு) பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல் குடியிருப்பு வாசிகள் ஆதார் கடிதம், பிவிசி கார்டு, அல்லது அதன் நகல் ஆகியவற்றை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடது. வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவற்றை பத்திரமாக கையாள்வதை போல ஆதார் அட்டைகளையும் கையாள வேண்டும். ஆதார் எண்ணை பகிர விரும்பாதபட்சத்தில் மெய்நிகர் எண் எனப்படும் விர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம்.
ஆதார் இணையதளத்தில் இந்த ஐடியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆதார் எண்ணிற்கு பதிலாக இந்த விர்ச்சுவல் ஐடியை பயன்படுத்த முடியும். அதேபோல், ஆதார் எண்ணை பயோமெட்ரிக் முறையில் லாக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லையென்றால் லாக்கிங் செய்து கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அன்லாக்கிங் செய்து கொள்ள முடியும்.
ஆதார் அட்டையுடன் இமெயில் இணைப்பதன் மூலம் ஆதார் எண் மின்னணு முறையில் பயன்படுத்தும் போது அது குறித்த அலார்ட் மெசேஜ் ஒவ்வொரு முறையும் இமெயில் மூலமாக தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடக்கும் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஆதார் எண்களை நம்பகமற்ற தளங்களில் பகிர்ந்து அதன்மூலமாக நடைபெறும் மோசடி வலைப்பின்னல்களுக்குள் சிக்கி விடக்கூடாது என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் ஆதார் ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.