பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு 5 நாட்களுக்கும் மேலாக உடலை வாட்டுவதால் அதிரையர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சாதாரண தொண்டை வலியில் ஆரம்பித்து, சளி இருமலாக மாறி வறட்டு இருமல் ஏற்படுகிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தற்போது தட்பவெட்பநிலை மாற்றத்தால் தான் இது போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும், மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம், நினைவாற்றல் குறையும் போது, இடைவிடாத காய்ச்சல் ஏற்படும் சூழலில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என தெரிவிக்கின்றனர்.