அதிரை சி.எம்.பி லைனின் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி முதலே பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2021ம் ஆண்டு தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கா.அண்ணாதுரையிடமும் சி.எம்.பி லைன் சாலை தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த சாலையை ஊரக சாலையாக மாற்றி தரமான சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் கா.அண்ணாதுரை வலியுறுத்தினார். இந்நிலையில் சுமார் ரூ.2.50கோடி மதிப்பீட்டில் சி.எம்.பி லைன் பிரதான சாலையை சீரமைக்கும் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.