வானில் மின்னும் விண்மீன்கள்
வாழ்த்தும் அழகுக் காட்சிகளை
வேனிற் காலப் பகற்கழிந்து
வீசும் இரவில் கண்டுகொண்டேன்
மின்னல் தோறும் சொல்லுகின்ற
மீளும் காதல் கதைகளைத்தான்
என்னுள் உருகி உணர்கின்றேன்
ஏனோ அறியேன் காரணத்தை
குளித்து மகிழ்ந்த உணர்வுகளை
குவியல் விண்மீன் கூட்டங்கள்
அளித்து என்னை அனுப்பியது
அந்தச் சுகத்தில் கண்ணயர்ந்தேன்
அள்ளித் தெளித்த கோலங்கள்
அழகுக் கலையின் வடிவங்கள்
தெள்ளத் தெளிவாய்ப் பாருங்கள்
தெரியும் இயற்கை ஒவியங்கள்
காணும் போது பால்வீதி
காணக் கிடைத்த பேறென்பேன்
வேணும் வேணும் என்றென்னை
வேட்கை யூட்டும் வெறியென்பேன்
எண்ணி விடவே இயலாத
இந்தக் கூட்டம் அற்புதமே
கண்ணிற் குளிர்ச்சி தருகின்ற
கண்ணில் இட்ட மருந்தாக
நெருங்கிப் பிடிக்க ஆசையுண்டு
நெஞ்சம் ஏங்கித் தவித்தாலும்
அருகில் இல்லை என்றறிந்து
அமைதி கொண்டேன் விண்மீனே
ஆக்கம்:
கவியன்பன் கலாம்