இந்திய அளவில் தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகமாகி வருகின்றன. தினம் தோறும் லட்சக்கணக்கான வண்டிகள் நாடு முழுவதும் விற்பனையாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்குபவர்களில் நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் லைசென்ஸ் இல்லை. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களில் முப்பது சதவிகிதம் போலியானது. உரிமம் வைத்திருப்பவர்களில் 20 சதவிகிதத்தினருக்கு முறையாக வாகனம் இயக்கத் தெரியாது என்கிறார்கள் போக்குவரத்து போலீஸார். சிபாரிசு மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், உரிமம் இல்லாதவர்களால்தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள சோதனை மைதானங்கள் (டெஸ்ட் டிராக்குகள்) டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாகப் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர், ‘‘ தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்லயும் தினமும் நூற்றுக்கணக்கானவங்க லைசென்ஸ் வாங்குறாங்க. இதுல சிலர் டெஸ்ட் டிரைவ் பண்ணாம, சிபாரிசு மூலமா லைசென்ஸ் வாங்கிடுறாங்க. இவங்களாலதான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்குது. இனிமேல் இப்படி சிபாரிசு மூலமா லைசென்ஸ் வாங்க முடியாது.
டெஸ்ட் டிராக் முழுக்க கம்யூட்டர் மயமாகப் போகுது. டிராக் முழுக்க கேமரா பொருத்தப்போறாங்க. லைசென்ஸ்சுக்கு விண்ணப்பம் செஞ்சவங்க, டூவிலருக்கு எட்டு போட்டு காட்டணும். நான்கு சக்கர வாகனங்களுக்கு எஸ் வளைவு, பாலம் மாதிரியான இடங்கள்ல ஓட்டிக்காட்டணும். இனிமே, விண்ணப்பத்தாரர்கள் இப்படி சோதனை ஓட்டம் செய்றதை கேமரா மூலமா கம்ப்யூட்டர் கண்காணிக்கும். ஓட்டுறதைப் பொறுத்து கம்யூட்டரே மார்க் போடும். சரியா ஓட்டாதவங்கள கம்யூட்டரே ரிஜக்ட் பண்ணிடும். இதுனால முறைகேடுகள் தவிர்க்கப்படும். இதுக்காக, அனைத்து மாவட்டங்கள்லயும் இருக்கிற வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஹெலிகாப்டர் மூலமா போட்டோ எடுத்து, போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்குப் பிறகு, வரும் ஆண்டிலிருந்து இந்த முறை அமல்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.