அதிரை கீழத்தெரு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்திருப்பதாக மின்வாரியத்தில் அல் மதரஸத்துன்நூருல் முஹம்மதியா இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு புகார் அளித்தனர். ஆனால் காலங்கள் கடந்தும் அந்த புகாருக்கு மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே மழை காலத்தில் அப்பகுதியில் உள்ள இரும்பு கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் மாடு பலியான நிகழ்வை சுட்டிக் காட்டி அதிரை மின்வாரியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜாமைதீன் கடந்த மாதம் மனு அளித்தார். அதில் மக்களை அச்சுறுத்தும் இரும்பு மின் கம்பத்தை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த மனுவையும் அதிரை மின்வாரியம் கிடப்பில்போட்டுவிட்டது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் பேசிய கோட்டூரார் ஹாஜாமைதீன், 19வது வார்டு பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றாமல் தனியார் நிறுவன பணிகளுக்கே அதிரை மின்வாரியம் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார். பொதுமக்களை அச்சுருத்தும் மின் கம்பங்களை உடனடியாக மாற்றியமைக்காவிட்டால் அதிரை துணை மின் நிலையத்தின் முன் மக்களை திரட்டி மிக பெரிய போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Daily Archives