நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 13,000 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7993 கோடி அளவுக்கு நஷ்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் ஆகும்.
இதனிடையே நிதி நெருக்கடி காரணமாக பிஎஸ்என்எல் நிர்வாகம் 10 முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முக்கியமானது 54 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது உள்ள்ளிட்டவையும் அடங்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கியமான ஒரு சீர்திருத்தமான ஒய்வு பெறும் வயதை 60இல் இருந்து 58 ஆக குறைத்துள்ளது. இந்த ஒரு நடவடிக்கையின் மூலமாக மட்டுமே 33568 பேர் வேலையை இழப்பார்கள்.
50 வயதைக் கடந்த அனைத்து பணியாளர்களுக்கும் விருப்ப ஓய்வு கொடுக்கும் திட்டத்தையும் பிஎஸ்என்எல் விரைவில் அறிவிக்க உள்ளதாம். மேற்கண்ட சீர்திருத்தங்கள் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 54451 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் தற்போது வேலை பார்க்கும் 1.74 லட்சம் பிஎஸ்என்எல் பணியாளர்களில் 30 சதவீதம் பேர் வேலையை இழப்பார்கள் என தெரிகிறது. இந்த 54 ஆயிரம் பேர்களும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது., இவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள தனது 1.74 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தராமல் இழுத்தடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு ஒருவழியாக சம்பளத்தை கொடுத்தது தனிக்கதை. இது ஒருபுறம் எனில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 6 மாதங்களாக தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் பிஎஸ்என்எல் நிர்வாகம், 35 ஆயிரம் ஊழியர்களை நீக்குவதன் மூலம் 5 ஆயிரம் கோடி பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம் 30 சதவீத பணியாளர்களை நீக்குவதால் குறைந்த பட்சம் 13 ஆயிரம் கோடிக்கு மேல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஊதியம் மற்றும் பணப்படியை சேமிக்க முடியும் என கருதுகிறது. இது பற்றிய அறிவிப்பு தேர்தலுக்கு பின் வரும் என எதிர்பார்க்கலாம்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதமாகவே பிஎஸ்என்எல் ஐ மூட அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பது ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.