பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக போராட்டங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஜியாவுதீன், சுயேட்சை வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிராம்பட்டினத்தை தளமாகக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இளைஞர் ஆற்றல் மிக்க ஜியாவுதீன், முன்னதாக தமுமுக, முஸ்லீம் லீக், நாதக போன்ற கட்சிகளில் அங்கம் வகித்ததுடன், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி மாற்று வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கட்சித் தொடர்புகளை விட்டு விலகிய அவர், சமூக பிரச்சினைகள் குறித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதன் மூலம் மக்களிடம் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டுள்ள ஜியாவுதீன், பட்டுக்கோட்டை தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து தனது அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளார். குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாமை, கல்வி மற்றும் சுகாதார வசதிகளின் குறைபாடு, விவசாய சவால்கள், சுத்தமான குடிநீர் பற்றாக்குறை போன்றவை குறித்து தீவிரமாக செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சிறுநீரக நோய் பிரச்சினையை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து சமூக போராட்டங்களின் வழியாக அரசியலுக்கு வந்துள்ள ஜியாவுதீனின் இந்த முடிவு, பட்டுக்கோட்டை தொகுதியில் புதிய அரசியல் மாற்றத்திற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.








