
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தார்.
அப்போது கோடை மழையுடன் கூடிய பலத்த இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு கமலா என்ற மனைவியும், முத்துக்குமார், முத்துராஜா, முத்துரேகா ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








