இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது.
ஜப்பான் அரசு மூலம் ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள். இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம்.
இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். இதனால் கடந்த வாரம் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம். ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” இந்த நிதியுதவியை நிறுத்தி இருக்கிறது. இதனால் மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் புல்லட் ரயில் பாதை போடப்படும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. காலவரையின்றி பணிகளை நிறுத்துவதாக ஜப்பான் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த திட்டம் நிறுத்தப்படுகிறது. முதலில் அந்த பகுதி மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனையை முதலில் அரசு தீர்க்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை தீர்ந்த பின் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசுக்கு ஜப்பான் நிறுவனம் பதில் அளித்துள்ளது.