கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(08/01/2019) சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழகத்தின் 33வது மாவட்டம் என்ற பெருமையை கள்ளக்குறிச்சி பெற்றுள்ளது.
முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக INTJ சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் எஸ்.எம்.சையது இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குறிப்பாக சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இன்றைய தினம் முதலமைச்சர் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.
மரக்காணம் தொடங்கி கல்வராயன் மலைவரை மிக நீண்ட நிலப்பரப்பாக விழுப்புரம் மாவட்டம் நிலவி வந்ததால் மக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
மக்களின் கோரிக்கையை ஏற்று 2016 சட்டசபை தேர்தலின்போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வாக்குறுதி இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த உத்தரவு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தமைக்கு முதல்வருக்கு எமது அமைப்பின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும், இதற்காக தொடர்ந்து கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்களுக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டிருந்தது.