தஞ்சை மாவட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
புதுப்பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான மணற் சிற்பங்களை உருவாக்கினர்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு, போலீஸ் மற்றும் தேர்தல் பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்குச்சீட்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பொதுமக்கள் அச்சமின்றி, சுதந்திரமாகவும் ஜனநாயகக் கடமையாகவும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.























