பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர செயலாளர் ஹசன் பேசுகையில், தேர்தல் காலங்களில் சில நடிகர்கள் சினிமா பிம்பங்களை முன்வைத்து அரசியல் அரங்கில் தோன்றுவதாகவும், ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் சினிமாவிற்குத் திரும்பிவிடுவதாகவும் விமர்சித்தார்.
சினிமா நட்சத்திரங்களை பார்க்க திரளும் கூட்டம் வாக்குகளாக மாறுவதில்லை என்றும், இதற்கு முன் பெரிய பிம்பத்துடன் வந்த பலரும் கட்சிகளை கலைத்து விட்டு அரசியல் களத்தை விலகியதையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இலக்கை நோக்கி இருக்க வேண்டும். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளன. அவற்றை குடும்பத் தலைவர்கள் கண்காணித்து, திமுக கூட்டணியின் பரப்புரைக்கான வலுவான கருவியாக மாற்ற வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும், சினிமா மீது அதிக ஈர்ப்பு கொண்ட இளைஞர்களை குடும்பத்தினர் கண்காணித்து, அவர்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வை வழங்கி வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், மமக, விசிக, எஸ்டிபிஐ, மஜக, ஐமுமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகளான,துணை செயலாளர் ஜமால் முகம்மது,அபூபக்கர்,பைத்துல்ரஹ்மான்,ஜெய்லானி,முஹ்சின் உள்ளிட்ட செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.








