உலகத்திலேயே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம்; இதை 280 நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதித்து விட்டோம். 3 நாட்களில் இருந்து 15 நாட்களுக்குள் 100% கொரோனா குணமாகிவிடும் என்று அறிவித்தார் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் ராம்தேவ். அப்போது, இந்த பரிசோதனைகள் அனைத்துக்கும் முறையான அனுமதி வாங்கிவிட்டோம் என்றும் கூறினார் ராம்தேவ்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்க பெரும் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் ராம்தேவ் அசால்ட்டாக மாத்திரைகள் கண்டுபிடித்துவிட்டோம்; ரூ.545 தான் ஒரு பேக் என கூறியது பெரும் சர்ச்சையானது. இதனால் உஷாராகிப் போன மத்திய அரசு, ராம்தேவ் நிறுவனம் முதலில் அவர்கள் சொல்லும் மருந்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; அதுவரை விளம்பரம் எதுவும் செய்யக் கூடாது என அதிரடி தடை விதித்தது.
தற்போது இன்னொரு திடீர் திருப்பமாக உத்தரகாண்ட் அரசு ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. அதில், ராம்தேவ் கம்பெனியான பதஞ்சலியின் கொரோனில் மருந்து என்பது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதனடிப்படையில் மட்டும்தான் அந்த மருந்துக்கு உத்தரகாண்ட் ஆயுஷ் துறை விற்பனைக்கான உரிமம் வழங்கியிருக்கிறது என விளக்கம் தந்துள்ளது.
மேலும் ராம்தேவின் கொரோனில் மருந்து, கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்தக் கூடிய மருந்து என்பதற்காக நாங்கள் லைசென்ஸே கொடுக்கவில்லை. அது தவறானது என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்தது தொடர்பாக ராம்தேவ் கம்பெனியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் அரசின் இந்த விளக்கம் மேலும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகால சித்த மருத்துவ முறைகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருகட்டமாக சித்த மருத்துவத்தையும் கொரோனா சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திடீரென கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடித்துவிட்டேன் என ராம்தேவ் அடித்துவிட்டதுதான் தற்போதைய களேபரத்துக்கு காரணம்.