அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் தனியாக சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும் நுழைவு தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. எதிர்கட்சியினர் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழக முதல்வர் சூரப்பாவா என்றும் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சிவி சண்முகம், எந்த நிலையிலும், எந்தவொரு சூழலிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய எந்தவித செயலையும் அரசு ஏற்காது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று கூறினார். சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள சில ஷரத்துகள், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க கோரியபோது அவர்கள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர். ஆகவே இது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாகவும் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. புதிதாக உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் மாணவர்களுக்கான 69 சதவிகித இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்றும் இந்த பிரச்னை வரக்கூடாது என்பதற்காகவே அரசு சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார்.