இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கும் கருத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்கும் முயற்சியில் அதிரை உள்ளூர் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக ஆர்வலர்களை காவல்துறையை பயன்படுத்தி மிரட்டி வந்த உள்ளூர் திமுக, தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தையும் அடக்கி ஒடுக்க முயன்று இருக்கிறது.
“அதிரையில் குடிநீரை குடிப்பதுபோல் நடித்த ஆளுமைகள்” என்கிற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் மீது பொய் புகார் ஒன்றை அதிரை காவல் நிலையத்தில் உள்ளூர் திமுகவினர் தொடுத்திருக்கிறார்கள். இதனை சட்டப்படி அதிரை எக்ஸ்பிரஸ் எதிர்கொள்ளும்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு முதலமைச்சர், உள்துறை செயலாளர், மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை இயக்குனர், காவல்துறை ஐஜி, டிஐஜி, மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அதிரை எக்ஸ்பிரஸ் அனுப்பியுள்ளது.
அதில் காவல்துறையை உள்ளூர் திமுகவினர் தவறாக பயன்படுத்துவது குறித்தும் கருத்துரிமை, ஊடக சுதந்திரத்தை கேலி கூத்தாக்கும் செயல்பாடுகள் குறித்தும் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.