Saturday, April 4, 2026

பட்டுக்கோட்டை மாவட்டம்! பேராவூரணி கோட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அவ்வப்போது எழுவதும், பின் அடங்கிபோவதும் வழக்கமான ஒன்றாகிவிட்ட சூழலில் பட்டுக்கோட்டை ஏன் மாவட்டமாக உருவாக வேண்டும் என்கிற அவசியத்தை மக்கள் மத்தியில் இப்போது பேசுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து பரிசீலனை செய்வதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறியிருக்கும் சூழலில் பட்டுக்கோட்டை மாவட்டம் கோரிக்கையை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது.

வருவாய்த்துறையின் நிர்வாக ரீதியில் தற்போது பட்டுக்கோட்டையின் அந்தஸ்து என்பது கோட்டமாகும். அதாவது மாவட்டத்திற்கு அடுத்த ரேங்க்கில் பட்டுக்கோட்டை இருக்கிறது. இதற்கு ஐ.ஏ.எஸ் ரேங்கில் உள்ள துணை ஆட்சியர்/கோட்டாட்சியர் தலைமையேற்று நிர்வாக பணிகளை கவனிக்கிறார்.

இந்த சூழலில் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க குறைந்தது இரண்டு கோட்டங்கள் வேண்டும் என்கிறது அரசு விதி. அதன்படி ஏற்கனவே பட்டுக்கோட்டை ஒரு கோட்டமாக இருப்பதால் தாலுகாவாக உள்ள பேராவூரணியை 2வது கோட்டமாக தரம் உயர்த்துவது என்பது அப்பகுதி சுற்றுவட்டார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் தென்னை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு (சில கிராமங்கள்), பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி (சில கிராமங்கள்), மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் மொத்தம் உள்ள 560 வருவாய் கிராமங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக 2 தாலுகாக்களை உருவாக்குவதன் மூலம் புதிய மாவட்டத்திற்கு தேவையான 5 தாலுகாக்கள் என்கிற விதி மற்றும் பரப்பளவு பூர்த்தியாகிவிடும். (புதிய மாவட்டத்திற்கு 200 வருவாய் கிராமங்களே போதுமானது).

ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கிய வேகமாக வளர்ந்து வரும் தொழில்நகரான பட்டுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் பட்சத்தில் தென்னை விவசாயத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பல திட்டங்களை அரசின் மூலம் செயல்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி கடலோர கிராமங்கள் மேம்படும். குறிப்பாக காவிரி கடைமடை கிராம மக்கள் 70கிலோ மீட்டர் தூரம் வரை பயணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாய நிலை மாறும். பருவமழை போன்ற பேரிடர் காலங்களில் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை, மீட்பு உள்ளிட்ட பணிகளை பட்டுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள முடியும். அரசின் திட்டங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் எளிதில் அணுகலாம். சிறப்பு திட்டங்களுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் கால அளவு குறைவதோடு மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.

மேலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வேளாண் துறைசார்ந்த கட்டமைப்பு, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படும். விவசாயமும் செழிக்கும். அதனால் கோருகிறோம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பட்டுக்கோட்டை மாவட்டம் அவசியம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக்...

அதிராம்பட்டினத்தில் ஏப்ரல் 3-ம் தேதி காவல் நிலையம் முற்றுகை: ஐக்கிய முஸ்லிம்...

அதிராம்பட்டினம்: ​அதிராம்பட்டினத்தில் நிலவி வரும் சமூக விரோதச் செயல்கள் மற்றும் காவல்துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!

தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில்...
spot_imgspot_imgspot_imgspot_img