தற்போது மொபைல் வாலெட்டுகள் அதிகளவில் மக்களிடையே புழங்கத்தொடங்கியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போது பெரும்பாலோனோர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துகின்றனர். இதனால், வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப, பெற மொபைல் வாலெட் எனப்படும் சேவைவை அதிகளவில் அவர்கள் பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர்.
கூகுள் பிளே ஸ்டோர்களில் அதிகளவிலான ஆப்கள் இதற்காக இருக்கின்றன. வங்கிக்கணக்கை அதில் இணைத்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பெறலாம். மிக எளிதாக இந்த சேவையை பெற முடிவதால், இதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.
பொதுமக்களிடம் இந்தவகை சேவைகளுக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்ட பல நிறுவனங்கள் மொபைல் வாலெட் சேவையில் இறங்கியுள்ளது. அதிகப்படியான ஆஃபர்களையும் அந்நிறுவனங்கள் அள்ளி வீசின. எனினும், வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் தகவல்கள் திருடுபோக வாய்ப்பு இருப்பதால், இந்த வகை சேவைகளை முறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கொண்டு வந்தது.
இந்நிலையில், “AnyDesk” என்ற பெயரிலான ஆப் வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கையில், இந்த ஆப்பில் UPI மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து, “AnyDesk” ஆப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஒருமுறை இதனை டவுன்லோட் செய்துவிட்டால், மற்ற ஆப்களில் இறுதியாக கேட்கப்படும் அனுமதி கேட்கப்படும்.
நாமும், மற்ற ஆப்ஸ்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓகே, ஓகே என்று கொடுப்பது போல், இதற்கும் கொடுத்தால், பணம் முழுவதும் வாடிக்கையாளரின் அனுமதியோடே திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“AnyDesk” ஆப் டவுன்லோட் செய்யப்பட்டவுடன் 9 இலக்கு எண் கிடைக்கும். அதனை, அந்த சைபர் கிரிமினல்கள், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், உங்கள் மொபைலின் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் எச்சரிக்கை செய்தியில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.