ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி அமைக்க வேண்டும் என திமுக மேற்கு நகர செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான SH அஸ்லம் மின்வாரிய உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“ரமலான் மாதம் என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமான ஆன்மிக காலமாகும். அதிகாலை சஹர் உணவு தயாரிப்பும், மாலை நோன்பு திறக்கும் நேரத்திலும் மின்சாரம் மிக அவசியமான ஒன்று. குறிப்பாக சிறிய குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் வசிக்கும் வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் பெரும் அசெளகரியம் உருவாகும்.
மேலும், பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகைகள், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட மத நிகழ்ச்சிகளும் மின்சாரத்தை சார்ந்தே நடைபெறுகின்றன. இந்நிலையில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.”
எனவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, ரமலான் மாதத்தின் முதல் நாளில் நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணியை மாற்றி, மாற்று தேதியில் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கையை மின்வாரிய அதிகாரிகள் சாதகமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.








