கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 37-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நிவாரண நிதி வழங்குமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதையும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதையும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயைத் தான் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். பெருவெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் திமுக சார்பில் தெரிவித்துக்கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.