கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுநரின் அழைப்பின் பேரில் எடியூரப்பா நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
கடந்த மூன்று முறையுமே அவர் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்தது கிடையாது. பி.எஸ் எடியூரப்பாவின் முழுப்பெயர் புக்கனகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா. ஆன்மீகம், சோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட எடியூரப்பா, தற்போது நான்காவது முறையாக தனது பெயரின் ஆங்கில ஸ்பெல்லிங்கை மாற்றியுள்ளார்.
1980-களில் அவரின் பெயர் Yadiyoorappa என இருந்தது. 1990-களில் Yediyurappa என ஸ்பெல்லிங்கை மாற்றினார். பின்னர், 2000-ம் ஆண்டில் நியூமராலஜி படி Yeddyurappa என ஸ்பெல்லிங்கை மாற்றினார். பின்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் Yediyurappa என மாற்றிய அவர், தற்போது மீண்டும் Yediyurappa என்ற பெயருக்கே திரும்பியுள்ளார்.
மேலும், தனது பச்சை துண்டு சென்டிமெண்டையும் எடியூரப்பா பதவியேற்கும் போது விடவில்லை. கடந்த முறை 3 நாட்கள் முதல்வராக இருந்தபோதும் பச்சைத்துண்டு அணிந்தே பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.