பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் (13-10-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார், பொதுமக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம் .கலியபெருமாள் முன்னிலை வகித்தார், செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள இரயில்வே கேட்டுகளுக்கு காலம் தாழ்த்தாமல் நிரந்தர பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தேவையான மற்ற அலுவலர்கள், பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க வேண்டும். காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு பகல் மற்றும் இரவு நேர விரைவு வண்டிகளை உடன் இயக்க வேண்டும். விரைவு வண்டிகளை இயக்கும் வரை தற்காலிகமாக மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு சென்று வர இணைப்பு இரயில் வசதி செய்து தரப்படவேண்டும்.
தமிழகத்தின் தென் பகுதி் மற்றும் கேரளாவில் இருந்து இந்தியாவின் வட மாநிலங்களுக்கு செல்ல இத்தடத்தின் வழியாக விரைவு இரயில்களை இயக்க வேண்டும், பட்டுக்கோட்டை இரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு, நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு இரயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் சரக்கு முனையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரு முனைகளில் இருந்தும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். வருகிற தைப்பூச விழா விற்கு மேல்மருவத்தூருக்கு பட்டுக்கோட்டையில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற இரயில்வே அமைச்சர், இரயில்வே போர்டு தலைவர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்கள், வர்த்தகர்கள,பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், இரயில் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மத்திய இரயில்வே அமைச்சருக்கு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கடிதங்கள், மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் பி.சுந்தரராஜன், இரா.ராஜாராமன், பி. சுப்ரமணியன் ,ஜி. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். முடிவில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார்..