குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது குடியுரிமை சட்ட திருத்தம். இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன.
பல்வேறு மாநிலங்களும் இக்குடியுரிமை சட்ட திருத்தத்தை ஏற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளன. கேரளா சட்டசபையில் இதனை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்திலும் இதற்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைகள் நிறுத்தப்படாவிட்டால் இவ்வழக்குகளை விசாரிக்க முடியாது என கூறியிருந்தது.
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் இதனை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.