தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டிற்கு அடுத்தபடியாக பேராவூரணி தொகுதியில் தான் அதிக அளவில் பெரிய,சிறிய, 70 க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள்,பாசன குளங்கள் உள்ளன.இவற்றில் ஏறத்தாழ 80 % சதவீத ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
குடிமராமத்து என்ற பெயரில் சில ஏரிகள் மட்டும் தூர்வாரப்படுகிறது. கல்லணை கால்வாய் பாசன கோட்டத்தின் கடைமடை பகுதியாக உள்ளதால் இந்த ஏரிகள் நிரம்பினால் தான் பாதிப்பின்றி சாகுபடி முழுமையாக நடைபெறும். இந்நிலையில் பேராவூரணி அருகே 20 ஏக்கர் 87 செண்டு பரப்பளவு கொண்ட முடச்சிக்காடு நெல்லடிக்குளம் பாசன ஏரி முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது. ஏரியை சில ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் இந்த நெல்லடிக்குளம் ஏரியை பயன்படுத்தி 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் தான் குடிதண்ணீர் வசதி மற்றும் அப்பகுதியில் நீர்மட்டம் உயரும்.ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரும்படி முடச்சிக்காடு விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சி.சௌந்தர்ராஜன், சி.ரெத்தினசாமி ஆகியோர் கூறியதாவது,வீரியங்கோட்டை-1, முடச்சிக்காடு புல எண் 108 ல் உள்ள உப்பு குளம் என்கிற நெல்லடிக்குளம் பேராவூரணி வழியாக வரும் ஆனந்தவல்லி வாய்க்கால் தண்ணீர் மூலம் இந்த ஏரியில் தண்ணீர் தேக்கி இதன் மூலம் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வந்தோம்.கடந்த 10 வருடமாக மேட்டூரில் நீர் குறைந்ததால் தண்ணீர் நிரப்ப முடியாமல் போனது. இந்த சமயத்தில் சிலர் ஏரியை ஆக்கிரமித்து விட்டனர்.இது குறித்து பலமுறை மனு அளித்தும் அரசோ,அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இப்பகுதி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
செய்தி:- திருஞானம்.