சமீபகாலமாக கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிஜாப் பிரச்சனைகள் சூழ்ந்துவந்த நிலையில் மற்றோரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் சாதி, மத வித்தியாசங்களின்றி பலரும் பங்கெடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருவிழா பகுதிகளில் கடைகள் அமைப்பதற்கு இஸ்லாமியர்களுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாஜக, பஜ்ரங்தன் தள் மற்றும் விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகள் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடைகளை நிர்வாகம் செய்வதற்கான ஏலத்தில் பஜ்ரங்தன் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தைக் கைப்பற்றியுள்ளார். அவரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கடைகளை அமைத்துக் கொள்ள முயன்ற இஸ்லாமியர்கள் உள்ளிட்ட வேற்று மதத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர்கள் கடைகளை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மதத்தைக் காரணம் காட்டி தங்களது வியாபாரத்தை குலைப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, “சில இந்து அமைப்புகள் இஸ்லாமிய வியாபாரிகள் கடைகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவது கவலையளிக்கும் விஷயம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மெளனமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.