அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கதாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை 17வது வார்டு கவுன்சிலர் மொய்தீனின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு மாதமும் தமது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பின் முக்கியமானதாக உள்ள லார்வா புழுக்கள் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லையிலிருந்து ஒரு அளவிற்கு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நகரின் பல பகுதிகளில் இன்னும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே அதிராம்பட்டினம் நகராட்சியினர், ஒரு வார்டில் மட்டுமல்லாமல் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக பூச்சி மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








