தமிழகத்தில் பரவலாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைக்கான வசதிகளை சுகாதார துறை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு குழுக்களை அனுப்பி வருகிறது,மாவட்ட நிர்வாகம்.
அவர்களின் ஆய்வை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தே தொடங்கி இருக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
பேரூராட்சியின் பின்புறம் மலைபோல் தேங்கி இருக்கும் பேரூராட்சியின் கழிவு சாதனங்களால் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை.
அருகில் மூடப்படாத பேரூராட்சியின் கழிவு நீர் வடிகால், கட்டண கழிப்பிடம், அருகே வசிக்கும் துப்புரவு தொழிலாளரின் குடும்பம் ஆகியவைகளை விட்டு விட்டு ஊருக்குள் டெங்குவை தேடுவதில் அர்த்தமில்லை.
அரசின் கழிவுகளில் நீர்தேங்கி அதில் டெங்கு பரவாதா? அல்லது அரசு கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் யாரையும் கடிக்காதா? என அப்பகுதி வாழ் வியாபாரிகளும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே பேரூராட்சி நிர்வாகம் மேற்கூறிய இடத்தில் கழிவுகளை அப்புறப்படுத்துவதுடன், கழிவுநீர் கால்வாயையும் மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.