பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி, ராணுவ வீரர் போல உடையணிந்து பங்கேற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியை பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் அபிநந்தன் குறித்த பாடலைப் பாடியதோடு இல்லாமல் ராணுவ வீரரின் சீருடை போன்ற உடையணிந்து பேரணியில் கலந்துகொண்டார். அவரது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரைன், ‘இந்தச் செயல் இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல் மற்றும் அவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் செயல்.ராணுவ வீரரின் உடையணிந்துகொண்டு ஓட்டு சேகரிப்பதற்கு வெட்கமாக இல்லையா? மோடி மற்றும் அமித்ஷா இந்திய வீரர்களை அவமதித்துள்ளனர். அவர்கள், நாட்டுப் பற்று குறித்து பாடம் எடுக்கிறார்கள்’ என்று சாடியுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் 171-வது பிரிவின்படி, உள்நோக்கத்துடன் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொது ஊழியர்களின் சீருடைகளை அணிவது சட்டப்படி குற்றமாகும். அதை கருத்தில் கொண்டு, மனோஜ் திவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை ஓட்டு அரசியலுக்காகப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று சமூகவலைதளவாசிகள் வசைபாடி வருகின்றனர்.
நீங்கயெல்லாம் எப்போ தான் திருந்த போறீங்களோ ?